அக்குபஞ்சர் மருத்துவம்
அக்குபஞ்சர் மருத்துவம்
போகர்
நமது புகழ்மிக்க பண்டைய நாகரீக வாழ்வியல் முறையில், மருத்துவம் வேறு, வாழ்க்கை முறை வேறு என்றில்லாமல், இரண்டறக் கலந்து வாழ்க்கையை வாழ்ததினால் ஆரோக்கியம்மிக்க உடல் நலத்தையும் எந்த ஒரு சூழ்நிலையிலும் (அகம், புறம் ) அணுகும் திறனையும் நம் முன்னோர்கள் பெற்றிருந்தனர்.
எல்லாச் சூழல்களிலும் மருத்துவத்தினை தனியே பிரித்துப் பார்க்க முடியாதவாறு வாழ்வியல் முறையோடு இணைத்தே நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தனர். பேரிடர் ஏற்படும்பொழுது பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படும் தற்காப்புக் கலைகளையும் அதைப் பின்பற்றிய மருத்துவ முறைகளையும் உருவாக்கிய பெருமை நம் தமிழர்களையே சாரும்.
மனிதன் வாழ்தல் கலையினை முழுமையாக அனுபவிப்பதற்காகவே படைக்கப்பட்ட நிலப் பகுதியில் தமிழகம் மிகவும் முதன்மை வாய்ந்தது. "கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி தமிழ்க்குடி" என்ற பெருமைமிக்க நிலப்பகுதியான தமிழகம் பல்வேறு கலைகளின் பிறப்பிடமாகத் திகழ்வதில் ஐயம் ஏதுமில்லை. இதில் மருத்துவக் கலையும் ஒன்று.
உடலைத் தத்துவார்த்த ரீதியாகப் பிரித்து, அண்டத்தில் என்னவெல்லாம் நிகழ்கின்றது என்பதை பிண்டத்தில் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். அண்டபிண்ட கலப்புத் தொடர்புதான் முப்பிணிகளுக்கும், உடல் தத்துவத்திற்கும் காரணமாக உள்ளது என நிருபித்தவர்கள் நமது சித்தர்கள் ஆவர். இவர்களே ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் தோற்றுவித்த படைப்பாளிகள் ஆவர்.
இப்பேறு பெற்ற ஞானிகள் வெளிக்கொணர்ந்த மருத்துவங்களுள் ஒன்றே அக்குபஞ்சர் மருத்துவம் ஆகும். மனித உடலின் ஒவ்வொரு அணுவின், உள் ஆதியின் வெளி அந்தமே அக்குபஞ்சர் புள்ளிகள்.
இப்புள்ளிகள் யாவும் தங்களுக்குள் ஒரு கால்வாய் போன்ற இணைப்பை (சக்தி ஓட்டப் பாதைகள்) அமைத்து அவ்வழியின் வாயிலாகவே, உடலின் இருப்பு, இயக்கம், இயக்கத்தின் வெளிப்பாடாகிய இயக்க விளைவு போன்றவைகளை வெளிப்படுத்தி இயங்குகின்றன.
அவ்வாறான மருத்துவத்தினை முறைப்படுத்தியவர்கள் சீனர்களாக இருந்தபோதிலும் தமிழ் சித்தர் போகர் பெருமானே இம்மருத்துவத்தின் முன்னோடி ஆவார்.
சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த போகர் பெருமான் வழங்கிய மருத்துவமுறையினை இன்றளவும் தமிழர்கள் தங்கள் குறைகளைக் களைய, வேண்டுதல் என்ற பெயரில் நாக்கில் அழகு குத்தியும், கன்னத்தில் வேல் குத்தியும், முதுகில் கயிற்றை கொக்கியின் மூலம் இணைத்து தேர் இழுத்தும், இம் மருத்துவ சிகிச்சையினை சூட்சுமத்தின் வாயிலாக செய்து வருகின்றனர். சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு சீனர்களால் போகரின் மருத்துவம் முறைமடுத்தப்பட்டு பல ஆண்டுகள் கழித்து நமக்கு அக்குபஞ்சர், சீன மருத்துவமாக வந்தடைந்துள்ளது.
மனிதன் வாழ்தல் கலையினை முழுமையாக அனுபவிப்பதற்காக மருத்துவம் என்னும் உயிர் காக்கும் கலைகளின் உயிர் கலையாகிய அக்குபஞ்சர் மருத்துவத்தினை எளிமையாக விரிவு செய்வதே சிறப்பாகும்.
"தமிழன் தோற்றுவித்த மருத்துவத்தினை அறிவதால் பெருமை கொள்வோம் நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்".